திகழும் திருமாலொடு நான்முகனும் புகழும் பெருமான்; அடியார் புகல, மகிழும் பெருமான் குடவாயில் மன்னி நிகழும் பெருங்கோயில் நிலாயவனே.
| [ 1]
|
ஓடும் நதியும், மதியோடு, உரகம், சூடும் சடையன்; விடை தொல்கொடிமேல் கூடும் குழகன் குடவாயில்தனில் நீடும் பெருங்கோயில் நிலாயவனே.
| [ 2]
|
கலையான்; மறையான்; கனல் ஏந்து கையான்; மலையாள் அவள் பாகம் மகிழ்ந்த பிரான்; கொலை ஆர் சிலையான் குடவாயில்தனில் நிலை ஆர் பெருங்கோயில் நிலாயவனே.
| [ 3]
|
சுலவும் சடையான்; சுடுகாடு இடமா, நல மென்முலையாள் நகைசெய்ய, நடம் குலவும் குழகன் குடவாயில் தனில் நிலவும் பெருங்கோயில் நிலாயவனே.
| [ 4]
|
என்தன் உளம் மேவி இருந்த பிரான்; கன்றன்; மணி போல் மிடறன்; கயிலைக் குன்றன்; குழகன் குடவாயில்தனில் நின்ற பெருங்கோயில் நிலாயவனே.
| [ 5]
|
Go to top |
அலை சேர் புனலன்; அனலன்; அமலன்; தலை சேர் பலியன்; சதுரன்; விதிரும் கொலை சேர் படையன் குடவாயில்தனில் நிலை சேர் பெருங்கோயில் நிலாயவனே.
| [ 6]
|
அறை ஆர் கழலன்; அழலன்; இயலின் பறை யாழ் முழவும் மறை பாட, நடம் குறையா அழகன் குடவாயில்தனில் நிறை ஆர் பெருங்கோயில் நிலாயவனே.
| [ 7]
|
வரை ஆர் திரள்தோள் அரக்கன் மடிய(வ்) வரை ஆர் ஒர்கால்விரல் வைத்த பிரான் வரை ஆர் மதில் சூழ் குடவாயில் மன்னும் வரை ஆர் பெருங்கோயில் மகிழ்ந்தவனே.
| [ 8]
|
பொன் ஒப்பவனும், புயல் ஒப்பவனும், தன் ஒப்பு அறியாத் தழல் ஆய் நிமிர்ந்தான்; கொல் நல் படையான் குடவாயில்தனில் மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே.
| [ 9]
|
வெயிலின் நிலையார், விரி போர்வையினார், பயிலும் உரையே பகர் பாவிகள்பால் குயிலன்; குழகன் குடவாயில்தனில் உயரும் பெருங்கோயில் உயர்ந்தவனே.
| [ 10]
|
Go to top |
கடுவாய் மலி நீர் குடவாயில்தனில் நெடு மா பெருங்கோயில் நிலாயவனை, தடம் ஆர் புகலித் தமிழ் ஆர் விரகன், வடம் ஆர் தமிழ் வல்லவர் நல்லவரே.
| [ 11]
|