மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல், கரம் ஒத்து, அகம் நக, மணி மிளிர்வது ஒர் அரவினர்; ஒளி கிளா அத் தகவு அடி தொழ, அருள் பெறு கணனொடும் உமையவள் வித்தகர்; உறைவது விரி பொழில் வள நகர் விளமரே.
| [ 1]
|
பட்டு இலகிய முலை அரிவையர் உலகினில் இடு பலி ஒட்டு இலகு இணை மர வடியினர், உமை உறு வடிவினர், சிட்டு இலகு அழகிய பொடியினர், விடைமிசை சேர்வது ஒர் விட்டு இலகு அழகு ஒளி பெயரவர், உறைவது விளமரே.
| [ 2]
|
அம் கதிர் ஒளியினர்; அரை இடை மிளிர்வது ஒர் அரவொடு செங்கதிர் அன நிறம், அனையது ஒர் செழு மணி மார்பினர்; சங்கு, அதிர் பறை, குழல், முழவினொடு, இசை தரு சரிதையர் வெங்கதிர் உறும் மழு உடையவர்; இடம் எனில் விளமரே.
| [ 3]
|
மாடம் அது என வளர் மதில் அவை எரி செய்வர், விரவு சீர்ப் பீடு என அருமறை உரை செய்வர், பெரிய பல் சரிதைகள் பாடலர், ஆடிய சுடலையில் இடம் உற நடம் நவில் வேடம் அது உடையவர், வியல் நகர் அது சொலில் விளமரே.
| [ 4]
|
பண் தலை மழலை செய் யாழ் என மொழி உமை பாகமாக் கொண்டு, அலை குரை கழல் அடி தொழுமவர் வினை குறுகிலர் விண்தலை அமரர்கள் துதி செய அருள்புரி விறலினர் வெண்தலை பலி கொளும் விமலர் தம் வள நகர் விளமரே.
| [ 5]
|
Go to top |
மனைகள் தொறு இடு பலி அது கொள்வர், மதி பொதி சடையினர் கனை கடல் அடு விடம் அமுது செய் கறை அணி மிடறினர், முனை கெட வரு மதில் எரி செய்த அவர், கழல் பரவுவார் வினை கெட அருள் புரி தொழிலினர், செழு நகர் விளமரே.
| [ 6]
|
நெறி கமழ் தரும் உரை உணர்வினர், புணர்வு உறு மடவரல் செறி கமழ் தரு உரு உடையவர், படை பல பயில்பவர், பொறி கமழ் தரு பட அரவினர், விரவிய சடை மிசை வெறி கமழ் தரு மலர் அடைபவர், இடம் எனில் விளமரே.
| [ 7]
|
தெண்கடல் புடை அணி நெடுமதில் இலங்கையர் தலைவனைப் பண் பட வரைதனில் அடர் செய்த பைங்கழல் வடிவினர், திண் கடல் அடை புனல் திகழ் சடை புகுவது ஒர் சேர்வினார் விண் கடல் விடம் மலி அடிகள் தம் வள நகர் விளமரே.
| [ 8]
|
தொண்டு அசைவு உற வரு துயர் உறு காலனை மாள்வு உற அண்டல் செய்து, இருவரை வெரு உற ஆர் அழல் ஆயினார் கொண்டல் செய்தரு திருமிடறினர்; இடம் எனில் அளி இனம் விண்டு இசை உறு மலர் நறு மது விரி பொழில் விளமரே.
| [ 9]
|
ஒள்ளியர் தொழுது எழ, உலகினில் உரை செயும் மொழிபல; கொள்ளிய களவினர் குண்டிகையவர் தவம் அறிகிலார் பள்ளியை மெய் எனக் கருதன்மின்! பரிவொடு பேணுவீர் வெள்ளிய பிறை அணி சடையினர் வள நகர் விளமரே!
| [ 10]
|
Go to top |
வெந்த வெண்பொடி அணி அடிகளை, விளமருள் விகிர்தரை, சிந்தையுள் இடைபெற உரை செய்த தமிழ் இவை செழுவிய அந்தணர் புகலியுள் அழகு அமர் அருமறை ஞானசம்- பந்தன மொழி இவை உரை செயுமவர் வினை பறையுமே.
| [ 11]
|