கரும்பு அமர் வில்லியைக் காய்ந்து, காதல் காரிகை மாட்டு அருள அரும்பு அமர் கொங்கை ஓர்பால் மகிழ்ந்த அற்புதம் செப்ப(அ)ரிதால்; பெரும் பகலே வந்து, என் பெண்மை கொண்டு, பேர்ந்தவர் சேர்ந்த இடம் சுரும்பு அமர் சோலைகள் சூழ்ந்த செம்மைத் தோணிபுரம் தானே.
| [ 1]
|
கொங்கு இயல் பூங்குழல் கொவ்வைச் செவ்வாய்க் கோமளமாது உமையாள பங்கு இயலும் திருமேனி எங்கும் பால் வெள்ளை நீறு அணிந்து, சங்கு இயல் வெள்வளை சோர வந்து, என் சாயல் கொண்டார் தமது ஊர் துங்கு இயல் மாளிகை சூழ்ந்த செம்மைத் தோணிபுரம் தானே.
| [ 2]
|
மத்தக்களிற்று உரி போர்க்கக் கண்டு, மாது உமை பேது உறலும், சித்தம் தெளிய நின்று ஆடி, ஏறு ஊர் தீவண்ணர், சில்பலிக்கு என்று, ஒத்தபடி வந்து, என் உள்ளம் கொண்ட ஒருவருக்கு இடம்போலும் துத்தம் நல் இன் இசை வண்டு பாடும் தோணிபுரம் தானே.
| [ 3]
|
வள்ளல் இருந்த மலை அதனை வலம் செய்தல் வாய்மை என உள்ளம் கொள்ளாது, கொதித்து எழுந்து, அன்று, எடுத்தோன் உரம் நெரிய, மெள்ள விரல் வைத்து, என் உள்ளம் கொண்டார் மேவும் இடம்போலும் துள் ஒலி வெள்ளத்தின் மேல் மிதந்த தோணிபுரம் தானே.
| [ 8]
|
வெல் பறவைக் கொடி மாலும், மற்றை விரை மலர் மேல் அயனும், பல் பறவைப்படி ஆய் உயர்ந்தும், பன்றி அது ஆய்ப் பணிந்தும், செல்வு அற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர் இடம்போலும் தொல் பறவை சுமந்து ஓங்கு செம்மைத் தோணிபுரம் தானே.
| [ 9]
|
குண்டிகை பீலி தட்டோடு நின்று கோசரம் கொள்ளியரும், மண்டை கை ஏந்தி மனம் கொள் கஞ்சி ஊணரும், வாய் மடிய, இண்டை புனைந்து, எருது ஏறி வந்து, என் எழில் கவர்ந்தார் இடம் ஆம் தொண்டு இசை பாடல் அறாத தொன்மைத் தோணிபுரம் தானே.
| [ 10]
|
Go to top |
தூ மரு மாளிகை மாடம் நீடு தோணிபுரத்து இறையை, மாமறை நான்கினொடு அங்கம் ஆறும் வல்லவன்- வாய்மையினால் நா மரு கேள்வி நலம் திகழும் ஞானசம்பந்தன்-சொன்ன பா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே.
| [ 11]
|