கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்; கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய்; பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய்; பவளக்குன்று அன்ன பரமன் கண்டாய்; வரு மணி நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; மாதேவன் கண்டாய்; வரதன் கண்டாய் குருமணி போல் அழகு அமரும் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
| [ 1]
|
கலைக் கன்று தங்கு கரத்தான் கண்டாய்; கலை பயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய்; அலைக் கங்கை செஞ்சடை மேல் ஏற்றான கண்டாய்; அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய்; மலைப் பண்டம் கொண்டு வரும் நீர்ப் பொன்னி வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் குலைத் தெங்கு அம்சோலை சூழ் கொட்டையூரில் கோடிச்சுரத்து உறையும் கோமான் தானே.
| [ 2]
|
செந்தாமரைப் போது அணிந்தான் கண்டாய்; சிவன் கண்டாய்; தேவர் பெருமான் கண்டாய்; பந்து ஆடு மெல் விரலாள் பாகன் கண்டாய்; பாலோடு, நெய், தயிர், தேன், ஆடி கண்டாய்; மந்தாரம் உந்தி வரும் நீர்ப்பொன்னி வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய் கொந்து ஆர் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
| [ 3]
|
பொடி ஆடும் மேனிப் புனிதன் கண்டாய்; புள் பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய்; இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய்; எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய்; மடல் ஆர் திரை புரளும் காவிரீ வாய் வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் கொடி ஆடு நெடு மாடக் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
| [ 4]
|
அக்கு, அரவம், அரைக்கு அசைத்த அம்மான் கண்டாய்; அருமறைகள் ஆறு அங்கம் ஆனான் கண்டாய்; தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் கண்டாய்; சதாசிவன் காண்; சலந்தரனைப் பிளந்தான் கண்டாய்; மைக் கொள் மயில்-தழை கொண்டு வரும் நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; மழுவன் கண்டாய் கொக்கு அமரும் வயல் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
| [ 5]
|
Go to top |
சண்டனை நல் அண்டர் தொழச் செய்தான் கண்டாய்; சதாசிவன் கண்டாய்; சங்கரன் தான் கண்டாய்; தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய்; சுடர் ஒளி ஆய்த் தொடர்வு அரிது ஆய் நின்றான் கண்டாய்; மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; மா முனிவர் தம்முடைய மருந்து கண்டாய் கொண்டல் தவழ் கொடி மாடக் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
| [ 6]
|
அணவு அரியான் கண்டாய்; அமலன் கண்டாய்; அவி நாசி கண்டாய்; அண்டத்தான் கண்டாய்; பண மணி மா நாகம் உடையான் கண்டாய்; பண்டரங்கன் கண்டாய்; பகவன் கண்டாய்; மணல் வரும் நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய் குணம் உடை நல் அடியார் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
| [ 7]
|
விரை கமழும் மலர்க் கொன்றைத் தாரான் கண்டாய்; வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய்; அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய்; அழல் ஆடி கண்டாய்; அழகன் கண்டாய்; வரு திரை நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன் கண்டாய் குரவு அமரும் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
| [ 8]
|
தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய்; தசரதன் தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய்; இளம்பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய்; எட்டு-எட்டு இருங் கலையும் ஆனான் கண்டாய்; வளம் கிளர் நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய் குளம் குளிர் செங்குவளை கிளர் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
| [ 9]
|
விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய்; விலங்கலில் வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய்; தண் தாமரையானும், மாலும், தேடத் தழல் பிழம்பு ஆய் நீண்ட கழலான் கண்டாய்; வண்டு ஆர் பூஞ்சோலை வலஞ்சுழியான் கண்டாய்; மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம் கொண்டாடு வேதியர் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
| [ 10]
|
Go to top |