நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்; வந்தாய்; போய் அறியாய்; மனமே புகுந்து நின்ற சிந்தாய்! எந்தைபிரான்! திரு மேற்றளி உறையும் எந்தாய்! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே .
| [ 1]
|
ஆள்-தான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டு பட்டுக் கேட்டேன், கேட்பது எல்லாம்; பிறவா வகை கேட்டொழிந்தேன்; சேட்(ட்)டார் மாளிகை சூழ் திரு மேற்றளி உறையும் மாட்(ட்)டே! உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே .
| [ 2]
|
மோறாந்து ஓர் ஒரு கால் நினையாது இருந்தாலும், வேறா வந்து என் உள்ளம் புக வல்ல மெய்ப்பொருளே! சேறு ஆர் தண் கழனித் திரு மேற்றளி உறையும் ஏறே! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே .
| [ 3]
|
உற்றார் சுற்றம் எனும் அது விட்டு நுன் அடைந்தேன்; எற்றால் என் குறைவு? என் இடரைத் துறந்தொழிந்தேன்; செற்றாய், மும்மதிலும்! திரு மேற்றளி உறையும் பற்றே! நுன்னை அல்லால் பணிந்து ஏத்த மாட்டேனே .
| [ 4]
|
எம்மான், எம் அ(ன்)னை, என்றவர் இட்டு இறந்தொழிந்தார்; மெய்ம் மால் ஆயின தீர்த்து அருள் செயும் மெய்ப்பொருளே! கைம்மா ஈர் உரியாய்! கனம் மேற்றளி உறையும் பெம்மான்! உன்னை அல்லால் பெரிது ஏத்த மாட்டேனே .
| [ 5]
|
Go to top |
நானேல் உன் அடியே நினைந்தேன்; நினைதலுமே ஊன் நேர் இவ் உடலம் புகுந்தாய்; என் ஒண்சுடரே! தேனே! இன்னமுதே! திரு மேற்றளி உறையும் கோனே! உன்னை அல்லால் குளிர்ந்து ஏத்த மாட்டேனே .
| [ 6]
|
கை ஆர் வெஞ்சிலை நாண் அதன் மேல் சரம் கோத்தே, எய்தாய், மும்மதிலும் எரியுண்ண; எம்பெருமான்! செய் ஆர் பைங்கமலத் திரு மேற்றளி உறையும் ஐயா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .
| [ 7]
|
விரை ஆர் கொன்றையினாய்! விமலா! இனி உன்னை அல்லால், உரையேன், நா அதனால், உடலில் உயிர் உள்ளளவும்; திரை ஆர் தண்கழனித் திரு மேற்றளி உறையும் அரையா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .
| [ 8]
|
நிலை ஆய் நின் அடியே நினைந்தேன்; நினைதலுமே; தலைவா! நின் நினையப் பணித்தாய்; சலம் ஒழிந்தேன்; சிலை ஆர் மா மதில் சூழ் திரு மேற்றளி உறையும் மலையே! உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே .
| [ 9]
|
பார் ஊர் பல்லவன் ஊர் மதில் காஞ்சி மா நகர்வாய்ச் சீர் ஊரும் புறவில்-திரு மேற்றளிச் சிவனை ஆரூரன்(ன்) அடியான்-அடித்தொண்டன், ஆரூரன்-சொன்ன சீர் ஊர் பாடல் வல்லார் சிவலோகம் சேர்வாரே .
| [ 10]
|
Go to top |