தனதனதன தானத் தானன தனதனதன தானத் தானன தனதனதன தானத் தானன ...... தனதான |
கருமுகில்திர ளாகக் கூடிய இருளெனமரு ளேறித் தேறிய கடிகமழள காயக் காரிகள் ...... புவிமீதே கனவியவிலை யோலைக் காதிகள் முழுமதிவத னேரப் பாவைகள் களவியமுழு மோசக் காரிகள் ...... மயலாலே பரநெறியுண ராவக் காமுகர் உயிர்பலிகொளு மோகக் காரிகள் பகழியைவிழி யாகத் தேடிகள் ...... முகமாயப் பகடிகள்பொரு ளாசைப் பாடிக ளுருவியதன பாரக் கோடுகள் படவுளமழி வேனுக் கோரருள் ...... புரிவாயே மரகதவித நேர்முத் தார்நகை குறமகளதி பாரப் பூண்முலை மருவியமண வாளக் கோலமு ...... முடையோனே வளைதருபெரு ஞாலத் தாழ்கடல் முறையிடநடு வாகப் போயிரு வரைதொளைபட வேல்விட் டேவிய ...... அதிதீரா அரவணைதனி லேறிச் சீருடன் விழிதுயில்திரு மால்சக் ராயுதன் அடியிணைமுடி தேடிக் காணவும் ...... அரிதாய அலைபுனல்சடை யார்மெச் சாண்மையும் உடையதொர்மயில் வாசிச் சேவக அழகியதிரு வானைக் காவுறை ...... பெருமாளே. |
Easy Version: கரு முகில் திரளாகக் கூடிய இருள் என மருள் ஏறித் தேறிய கடி கமழ் அளக ஆயக்காரிகள் புவி மீதே கனவிய விலை ஓலைக் காதிகள் முழு மதி வதன(ம்) நேர் அப்பாவைகள் களவிய முழு மோசக்காரிகள் மயலாலே பர நெறி உணரா அக்காமுகர் உயிர் பலி கொ(ள்)ளு மோகக்காரிகள் பகழியை விழியாகத் தேடிகள் முகம் மாயப் பகடிகள் பொருள் ஆசைப் பாடிகள் உருவிய தன பாரக் கோடுகள் பட உளம் அழிவேனுக்கு ஓர் அருள் புரிவாயே மரகத வித நேர் முத்து ஆர் நகை குற மகள் அதி பாரப் பூண் முலை மருவிய மணவாளக் கோலமும் உடையோனே வளை தரு பெரு ஞாலத்து ஆழ் கடல் முறை இட நடுவாகப் போய் இரு வரை தொளை பட வேல் விட்டு ஏவிய அதி தீரா அரவு அணை தனில் ஏறிச் சீருடன் விழி துயில் திருமால் சக்ராயுதன் அடி இணை முடி தேடிக் காணவும் அரிதாய அலை புனல் சடையார் மெச்சு ஆண்மையும் உடையது ஒர் மயில் வாசிச் சேவக அழகிய திருவானைக்கா உறை பெருமாளே. |
Add (additional) Audio/Video Link
|
|
கரு முகில் திரளாகக் கூடிய இருள் என மருள் ஏறித் தேறிய
கடி கமழ் அளக ஆயக்காரிகள் ... கரிய மேகங்கள் திரண்டு கூடிய
இருள் என்று சொல்லும்படியான வியப்பு நிறைந்து விளக்கமுற்றதும், நறு
மணம் வீசுவதுமான கூந்தலை உடைய அழகை உடையவர்கள்,
புவி மீதே கனவிய விலை ஓலைக் காதிகள் ... இந்த உலகிலேயே
மிகுந்த விலை கொண்ட காதணியை அணிந்தவர்கள்,
முழு மதி வதன(ம்) நேர் அப்பாவைகள் ... பூரண சந்திரனை ஒத்த
முகத்தை உடைய அந்தப் பதுமையைப் போன்றவர்கள்,
களவிய முழு மோசக்காரிகள் ... கள்ளத்தனத்துடன் கூடிய முழு
மோசம் செய்பவர்கள்
மயலாலே பர நெறி உணரா அக்காமுகர் உயிர் பலி
கொ(ள்)ளு மோகக்காரிகள் ... (ஆகிய இத்தகைய வேசியர்கள்)
மீதுள்ள ஆசையால் மேலான மார்க்கத்தை அறியாத அந்தக் காமாந்தகர்
உயிரையே பலி கொள்ளுகின்ற ஆசைக்காரிகள்,
பகழியை விழியாகத் தேடிகள் முகம் மாயப் பகடிகள் பொருள்
ஆசைப் பாடிகள் ... அம்பையே கண்ணாகத் தேடி வைத்துள்ளவர்கள்,
முகம் காட்டிப் பாசாங்கு செய்கின்ற வெளி வேஷதாரிகள், பொருள்
மேலேயே ஆசை கொண்டுள்ளவர்கள் (ஆகிய
விலைமாதர்களின்)
உருவிய தன பாரக் கோடுகள் பட உளம் அழிவேனுக்கு
ஓர் அருள் புரிவாயே ... வடிவழகு கொண்டுள்ள மார்பகங்களான
சிகர முனைகள் என் நெஞ்சில் தைக்க உள்ளம் அழிகின்ற எனக்கு
ஒப்பற்ற அருளைப் புரிந்திடுக.
மரகத வித நேர் முத்து ஆர் நகை குற மகள் ... மரகதப் பச்சை
நிறம் கொண்டவளும், முத்துக்கள் போன்ற பற்களை உடையவளுமான
குறப் பெண்ணான வள்ளியின்
அதி பாரப் பூண் முலை மருவிய மணவாளக் கோலமும்
உடையோனே ... அதிக பாரமுள்ள ஆபரணம் அணிந்த மார்பினைப்
பொருந்திய மணவாளக் கோலம் உடையவனே,
வளை தரு பெரு ஞாலத்து ஆழ் கடல் முறை இட நடுவாகப்
போய் ... பெரிய பூமியை வளைந்துள்ள ஆழமான கடல் முறையிட,
அக்கடலின் நடுவில் சென்று
இரு வரை தொளை பட வேல் விட்டு ஏவிய அதி தீரா ...
பெரிய மலையாகிய கிரவுஞ்சத்தை பிளவுபடும்படி வேலைச் செலுத்திய
மிக்க வல்லவனே,
அரவு அணை தனில் ஏறிச் சீருடன் விழி துயில் திருமால்
சக்ராயுதன் ... (ஆதிசேஷனாம்) பாம்பணையின் மேல் ஏறி, சீராகக்
கண் துயிலும் திருமால், சக்ராயுதத்தை ஏந்தியவன்,
அடி இணை முடி தேடிக் காணவும் அரிதாய அலை புனல்
சடையார் மெச்சு ... (சிவனுடைய) இரண்டு திருவடியின் என்லையைத்
தேடிப் பார்ப்பதற்கும் கிடையாதிருந்தவரும், அலைகளைக் கொண்ட
கங்கையைச் சடையில் தரித்தவருமாகிய சிவ பெருமான் மெச்சுகின்ற
ஆண்மையும் உடையது ஒர் மயில் வாசிச் சேவக ... ஆண்மையை
உடைய ஒப்பற்ற மயில் என்னும் குதிரையை வாகனமாகக் கொண்டவனே,
அழகிய திருவானைக்கா உறை பெருமாளே. ... அழகிய
திருவானைக்காவில் வீற்றிருக்கும் பெருமாளே.