சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
4.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான் பண் - திருநேரிசை:கொல்லி (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=vYtWwNzg12A |
4.041
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொய் விராம் மேனி தன்னைப் பண் - திருநேரிசை:கொல்லி (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை) Audio: https://www.youtube.com/watch?v=Aa6ZjiSja28 |
4.042
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொருத்திய குரம்பை தன்னைப் பொருள் பண் - திருநேரிசை:கொல்லி (திருத்துருத்தி வேதேசுவரர் முகிழாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=k69FBvKLoqk |
4.043
திருநாவுக்கரசர்
தேவாரம்
மறை அது பாடிப் பிச்சைக்கு பண் - திருநேரிசை:கொல்லி (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) திருமேற்றளிநாதர் திருமேற்றளிநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=4KnYtA_BFEc |
4.045
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத பண் - திருநேரிசை:கொல்லி (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=zy7SU8mdaHI |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.039  
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
பண் - திருநேரிசை:கொல்லி (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான் கொண்ட மாலைத் துண்டனே! சுடர் கொள் சோதீ! தூ நெறி ஆகி நின்ற அண்டனே! அமரர் ஏறே! திரு ஐயாறு அமர்ந்த தேனே! தொண்டனேன், தொழுது உன் பாதம் சொல்லி, நான் திரிகின்றேனே. | [1] |
பீலி கை இடுக்கி, நாளும் பெரியது ஓர் தவம் என்று எண்ணி, வாலிய தறிகள் போல மதி இலார் பட்டது என்னே! வாலியார் வணங்கி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த ஆறே! | [2] |
தட்டு இடு சமணரோடே தருக்கி, நான் தவம் என்று எண்ணி, ஒட்டிடு மனத்தினீரே! உம்மை யான் செய்வது என்னே! மொட்டு இடு கமலப் பொய்கைத் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு ஒட்டிடும் உள்ளத்தீரே! உம்மை நான் உகந்திட்டேனே. | [3] |
பாசிப் பல் மாசு மெய்யர் பலம் இலாச் சமணரோடு நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன்; தேசத்தார் பரவி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயும் அன்றே. | [4] |
கடுப் பொடி அட்டி மெய்யில், கருதி ஓர் தவம் என்று எண்ணி, வடுக்களோடு இசைந்த நெஞ்சே! மதி இலி பட்டது என்னே! மடுக்களில் வாளை பாயும் திரு ஐயாறு அமர்ந்த தேனை அடுத்து நின்று உன்னு, நெஞ்சே! அருந்தவம் செய்த ஆறே! | [5] |
துறவி என்று அவம் அது ஓரேன்; சொல்லிய சொலவு செய்து(வ்) உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி; நறவம் ஆர் பொழில்கள் சூழ்ந்த திரு ஐயாறு அமர்ந்த தேனை மறவு இலா நெஞ்சமே! நல்மதி உனக்கு அடைந்தஆறே! | [6] |
பல் உரைச் சமணரோடே பலபல காலம் எல்லாம் சொல்லிய சொலவு செய்தேன்; சோர்வன், நான் நினைந்தபோது; மல்லிகை மலரும் சோலைத் திரு ஐயாறு அமர்ந்த தேனை! எல்லியும் பகலும் எல்லாம் நினைந்த போது இனியஆறே! | [7] |
மண் உளார் விண் உளாரும் வணங்குவார் பாவம் போக,- எண் இலாச் சமணரோடே இசைந்தனை, ஏழை நெஞ்சே!- தெண் நிலா எறிக்கும் சென்னித் திரு ஐயாறு அமர்ந்த தேனைக் கண்ணினால் காணப் பெற்றுக் கருதிற்றே முடிந்தஆறே! | [8] |
குருந்தம் அது ஒசித்த மாலும், குலமலர் மேவினானும், திருந்து நல்-திரு வடீயும் திருமுடி காணமாட்டார் அருந்தவ முனிவர் ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனைப் பொருந்தி நின்று உன்னு, நெஞ்சே! பொய் வினை மாயும் அன்றே. | [9] |
அறிவு இலா அரக்கன் ஓடி, அருவரை எடுக்கல் உற்று, முறுகினான்; முறுகக் கண்டு மூதறி வாளன் நோக்கி நிறுவினான், சிறுவிர(ல்)லால்; நெரிந்து போய் நிலத்தில் வீழ, அறிவினால் அருள்கள் செய்தான், திரு ஐயாறு அமர்ந்த தேனே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.041  
பொய் விராம் மேனி தன்னைப்
பண் - திருநேரிசை:கொல்லி (திருத்தலம் திருச்சோற்றுத்துறை ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாம்பிகை உடனுறை அருள்மிகு தொலையாச்செல்வர் திருவடிகள் போற்றி )
பொய் விராம் மேனி தன்னைப் பொருள் எனக் காலம் போக்கி மெய் விராம் மனத்தன் அல்லேன்; வேதியா! வேத நாவா! ஐவரால் அலைக்கப்பட்ட ஆக்கை கொண்டு அயர்த்துப் போனேன் செய் வரால் உகளும் செம்மைத் திருச் சோற்றுத் துறையனாரே! | [1] |
கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா; எட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை- அட்ட மா மலர்கள் கொண்டே ஆன் அஞ்சும் ஆட்ட ஆடிச் சிட்டராய் அருள்கள் செய்வார், திருச் சோற்றுத் துறையனாரே. | [2] |
கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளைக் காதலாலே எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக ஏத்தும்! பல் இல் வெண்தலை கை ஏந்திப் பல் இலம் திரியும் செல்வர் சொல்லும் நன்பொருளும் ஆவார்-திருச் சோற்றுத் துறையனாரே. | [3] |
கறையராய்க் கண்டம், நெற்றிக் கண்ணராய், பெண் ஓர் பாகம் இறையராய், இனியர் ஆகி, தனியராய், பனி வெண் திங்கள்- பிறையராய், செய்த எல்லாம் பீடராய், கேடு இல் சோற்றுத்- துறையராய், புகுந்து என் உள்ளச் சோர்வு கண்டு அருளினாரே. | [4] |
பொந்தையைப் பொருளா எண்ணிப் பொருக்கெனக் காலம் போனேன்; எந்தையே! ஏகமூர்த்தி! என்று நின்று ஏத்தமாட்டேன்; பந்தம் ஆய், வீடும் ஆகி, பரம்பரம் ஆகி, நின்று சிந்தையுள்-தேறல் போலும்-திருச் சோற்றுத் துறையனாரே. | [5] |
பேர்த்து இனிப் பிறவா வண்ணம் பிதற்று மின், பேதை பங்கன் பார்த்தனுக்கு அருள்கள் செய்த பாசுபதன் திற(ம்)மே! ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்றுத் தீர்த்தம் ஆய்ப் போத விட்டார், திருச் சோற்றுத் துறையனாரே. | [6] |
கொந்து ஆர் பூங் குழலினாரைக் கூறியே காலம் போன, எந்தை எம்பிரானாய் நின்ற இறைவனை ஏத்தாது; அந்தோ! முந்து அரா அல் குலாளை உடன் வைத்த ஆதிமூர்த்தி, செந் தாது புடைகள் சூழ்ந்த திருச் சோற்றுத் துறையனாரே. | [7] |
அம் கதிரோன் அவ(ன்)னை அண்ணலாக் கருத வேண்டா; வெங் கதிரோன் வழீயே போவதற்கு அமைந்து கொண் மின்! அம் கதிரோன் அவ(ன்)னை உடன் வைத்த ஆதிமூர்த்தி- செங் கதிரோன் வணங்கும் திருச் சோற்றுத் துறையனாரே. | [8] |
ஓதியே கழிக்கின்றீர்கள்; -உலகத்தீர்!-ஒருவன் தன்னை நீதியால் நினைக்க மாட்டீர்; நின்மலன் என்று சொல்லீர் சாதியா நான் முக(ன்)னும் சக்கரத்தானும் காணாச் சோதி ஆய்ச் சுடர் அது ஆனார்-திருச் சோற்றுத் துறையனாரே. | [9] |
மற்று நீர் மனம் வையாதே மறுமையைக் கழிக்க வேண்டில் பெற்றது ஓர் உபாயம் தன்னால் பிரானையே பிதற்று மின்கள்! கற்று வந்து அரக்கன் ஓடிக் கயிலாய மலை எடுக்க, செற்று உகந்து அருளிச் செய்தார்-திருச் சோற்றுத் துறையனாரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.042  
பொருத்திய குரம்பை தன்னைப் பொருள்
பண் - திருநேரிசை:கொல்லி (திருத்தலம் திருத்துருத்தி ; (திருத்தலம் அருள்தரு முகிழாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வேதேசுவரர் திருவடிகள் போற்றி )
பொருத்திய குரம்பை தன்னைப் பொருள் எனக் கருத வேண்டா; இருத்தி எப்போதும் நெஞ்சுள், இறைவனை, ஏத்து மின்கள்! ஒருத்தியைப் பாகம் வைத்து அங்கு ஒருத்தியைச் சடையில் வைத்த துருத்தி அம் சுடரினானைத் தொண்டனேன் கண்டஆறே! | [1] |
சவை தனைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்ற இவை ஒரு பொருளும் அல்ல; இறைவனை ஏத்து மி(ன்)னோ! அவை புரம் மூன்றும் எய்தும் அடியவர்க்கு அருளிச் செய்த சுவையினை, துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே! | [2] |
உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்து மி(ன்)னோ! கன்னியை ஒரு பால் வைத்து, கங்கையைச் சடையுள் வைத்து, பொன்னியின் நடுவு தன்னுள் பூம் புனல் பொலிந்து தோன்றும் துன்னிய துருத்தியானைத் தொண்டனேன் கண்ட ஆறே.! | [3] |
ஊன் தலை வலியன் ஆகி, உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் தான் தலைப்பட்டு நின்று, சார் கனல் அகத்து வீழ, வான் தலைத் தேவர் கூடி,வானவர்க்கு இறைவா! என்னும் தோன்றலை, துருத்தியானை தொண்டனேன் கண்டஆறே! | [4] |
உடல் தனைக் கழிக்கல் உற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் இடர் தனைக் கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து மி(ன்)னோ! கடல் தனில் நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்ற சுடர் தனை துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே! | [5] |
அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினை மின், நீர்கள் பொள்ளல் இக்காயம் தன்னுள் புண்டரீகத்து இருந்த வள்ளலை, வானவர்க்கும் காண்பு அரிது ஆகி நின்ற துள் அலைத் துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே! | [6] |
பாதியில் உமையாள் தன்னைப் பாகமா வைத்த பண்பன்; வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்தச் சாதி ஆம் சதுமுக(ந்)னும் சக்கரத்தானும் காணாச் சோதியை, துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே! | [7] |
சாம் மனை வாழ்க்கை ஆன சலத்துளே அழுந்த வேண்டா; தூமம் நல் அகிலும் காட்டித் தொழுது அடி வணங்குமி(ந்)னோ! சோமனைச் சடையுள் வைத்துத் தொல்-நெறி பலவும் காட்டும் தூ மணல்-துருத்தியானைத் தொண்டனேன் கண்டஆறே! | [8] |
குண்டரே, சமணர் புத்தர்; குறி அறியாது நின்று கண்டதே கருதுவார்கள் கருத்து எண்ணாது ஒழிமின், நீர்கள்! விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க்கு அருள்கள் செய்த தொண்டர்கள் துணையினானைத் துருத்தி நான் கண்டஆறே! | [9] |
பிண்டத்தைக் கழிக்க வேண்டில் பிரானையே பிதற்று மின்கள் அண்டத்தைக் கழிய நீண்ட அடல் அரக்கன் தன் ஆண்மை கண்டு ஒத்துக் கால் விர(ல்)லால் ஊன்றி, மீண்டும் அருளிச்செய்த துண்டத்துத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டஆறே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.043  
மறை அது பாடிப் பிச்சைக்கு
பண் - திருநேரிசை:கொல்லி (திருத்தலம் திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) ; (திருத்தலம் அருள்தரு திருமேற்றளிநாயகி உடனுறை அருள்மிகு திருமேற்றளிநாதர் திருவடிகள் போற்றி )
மறை அது பாடிப் பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார் பிறை அது, சடைமுடி(ம்)மேல்; பெய்வளையாள் தன்னோடும் கறை அது கண்டம் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் இறையவர்-பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே. | [1] |
மால் அன மாயன் தன்னை மகிழ்ந்தனர்; விருத்தர் ஆகும் பாலனார்; பசுபதி(ய்)யார்; பால் வெள்ளைநீறு பூசிக் காலனைக் காலால் காய்ந்தார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் ஏல நல் கடம்பன் தந்தை-இலங்கு மேற்றளியனாரே. | [2] |
விண் இடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த, பண் இடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார் கண் இடை மணியின் ஒப்பார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் எண் இடை எழுத்தும் ஆனார்-இலங்கு மேற்றளியனாரே. | [3] |
சோமனை அரவினோடு சூழ் தரக் கங்கை சூடும் வாமன்; நல் வானவர்கள் வலம் கொடு வந்து போற்றக் காமனைக் காய்ந்த கண்ணார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் ஏமம் நின்று ஆடும் எந்தை-இலங்கு மேற்றளியனாரே. | [4] |
ஊனவர்; உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி, தானவர் தனமும் ஆகி, தனஞ்சயனோடு எதிர்ந்த கானவர்; காளகண்டர்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் ஏனம் அக்கோடு பூண்டார்-இலங்கு மேற்றளியனாரே. | [5] |
மாயன் ஆம் மாலன் ஆகி, மலரவன் ஆகி, மண் ஆய், தேயம் ஆய், திசை எட்டு ஆகி, தீர்த்தம் ஆய், திரிதர்கின்ற காயம் ஆய், காயத்து உள்ளார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் ஏய மென் தோளிபாகர் -இலங்கு மேற்றளியனாரே. | [6] |
மண்ணினை உண்ட மாயன் தன்னை ஓர் பாகம் கொண்டார் பண்ணினைப் பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார் கண்ணினை மூன்றும் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் எண்ணினை எண்ண வைத்தார் -இலங்கு மேற்றளியனாரே. | [7] |
செல்வியைப் பாகம் கொண்டார்; சேந்தனை மகனாக் கொண்டார் மல்லிகைக் கண்ணியோடு மா மலர்க்கொன்றை சூடி கல்வியைக் கரை இலாத காஞ்சி மா நகர் தன்னுள்ளால் எல்லியை விளங்க நின்றார்-இலங்கு மேற்றளியனாரே. | [8] |
வேறு இணை இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாளைக் கூறு இயல் பாகம் வைத்தார்; கோள் அரா மதியும் வைத்தார் ஆறினைச் சடையுள் வைத்தார்; அணி பொழில் சச்சி தன்னுள் ஏறினை ஏறும் எந்தை-இலங்கு மேற்றளியனாரே. | [9] |
தென்னவன் மலை எடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு மன்னவன் விரலால் ஊன்ற, மணி முடி நெரிய, வாயால் கன்னலின் கீதம் பாடக் கேட்டவர்; காஞ்சி தன்னுள் இன்னவற்கு அருளிச்செய்தார்-இலங்கு மேற்றளியனாரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.045  
வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத
பண் - திருநேரிசை:கொல்லி (திருத்தலம் திருவொற்றியூர் ; (திருத்தலம் அருள்தரு வடிவுடையம்மை உடனுறை அருள்மிகு மாணிக்கத்தியாகர் திருவடிகள் போற்றி )
வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத கீதன் தன் பாதம் மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத் தீயால் கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துள் கலந்து நின்று(வ்) உள்ளத்துள் ஒளியும் ஆகும், ஒற்றியூர் உடைய கோவே. | [1] |
வசிப்பு எனும் வாழ்க்கை வேண்டா; வானவர் இறைவன் நின்று, புசிப்பது ஓர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில், அசிர்ப்பு எனும் அருந்தவத்தால் ஆன்மாவின் இடம் அது ஆகி உசிர்ப்பு எனும் உணர்வின் உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே. | [2] |
தானத்தைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்றீா வானத்தை வணங்க வேண்டில் வம்மின்கள், வல்லீர் ஆகில்! ஞானத்தை விளக்கை ஏற்றி நாடி உள் விரவ வல்லார் ஊனத்தை ஒழிப்பர் போலும், ஒற்றியூர் உடைய கோவே. | [3] |
காமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புண்ணாதே, சாமத்து வேதம் ஆகி நின்றது ஓர் சயம்பு தன்னை ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்புவாருக்கு ஓமத்துள் ஒளி அது ஆகும், ஒற்றியூர் உடைய கோவே. | [4] |
சமையம் மேல் ஆறும் ஆகி, தான் ஒரு சயம்பு ஆகி, இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன்; கமையினை உடையர் ஆகிக் கழல் அடி பரவுவாருக்கு உமை ஒரு பாகர் போலும்-ஒற்றியூர் உடைய கோவே. | [5] |
ஒருத்தி தன் தலைச் சென்றாளைக் கரந்திட்டான்; உலகம் ஏத்த ஒருத்திக்கு நல்லன் ஆகி, மறுப் படுத்து ஒளித்தும், ஈண்டே ஒருத்தியைப் பாகம் வைத்தான்; உணர்வினால் ஐயம் உண்ணி; ஒருத்திக்கும் நல்லன் அல்லன் ஒற்றியூர் உடைய கோவே. | [6] |
பிணம் உடை உடலுக்கு ஆகப் பித்தராய்த் திரிந்து நீங்கள் புணர்வு எனும் போகம் வேண்டா; போக்கல் ஆம், பொய்யை நீங்க; நிணம் உடை நெஞ்சினுள்ளால் நினைக்குமா நினைக்கின்றாருக்கு உணர்வினோடு இருப்பர் போலும், ஒற்றியூர் உடைய கோவே. | [7] |
பின்னு வார் சடையான் தன்னைப் பிதற்றிலாப் பேதைமார்கள் துன்னுவார், நரகம் தன்னுள்;-தொல்வினை தீர வேண்டின், மன்னு வான் மறைகள் ஓதி, மனத்தினுள் விளக்கு ஒன்று ஏற்றி, உன்னுவார் உள்ளத்து உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே. | [8] |
முள்குவார் போகம் வேண்டின் முயற்றியால்; இடர்கள் வந்தால் எள்குவார்; எள்கி நின்று அங்கு இது ஒரு மாயம் என்பார் பள்குவார் பத்தர் ஆகிப் பாடியும் ஆடியும் நின்று உள்குவார் உள்ளத்து உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே. | [9] |
வெறுத்து உகப் புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டும்; நெஞ்சே! மறுத்து உக, ஆர்வச் செற்றக் குரோதங்கள் ஆன மாய! பொறுத்து உகப் புட்பகத்தேர் உடையானை அடர ஊன்றி ஒறுத்து உகந்து அருள்கள் செய்தார், ஒற்றியூர் உடைய கோவே. | [10] |