சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.119
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முள்ளின் மேல் முது கூகை பண் - வியாழக்குறிஞ்சி (திருக்கள்ளில் சிவானந்தேசுவரர் ஆனந்தவல்லியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=4AdIJafuRmY |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.119  
முள்ளின் மேல் முது கூகை
பண் - வியாழக்குறிஞ்சி (திருத்தலம் திருக்கள்ளில் ; (திருத்தலம் அருள்தரு ஆனந்தவல்லியம்மை உடனுறை அருள்மிகு சிவானந்தேசுவரர் திருவடிகள் போற்றி )
முள்ளின் மேல் முது கூகை முரலும் சோலை, வெள்ளில் மேல் விடு கூறைக்கொடி விளைந்த கள்ளில் மேய அண்ணல் கழல்கள் நாளும் உள்ளும்! மேல் உயர்வு எய்தல் ஒருதலையே. | [1] |
ஆடலான், பாடலான், அரவங்கள் பூண்டான், ஓடு அலால் கலன் இல்லான்-உறை பதியாக் காடு அலால் கருதாத கள்ளில் மேயான்; பாடு எலாம் பெரியோர்கள் பரசுவாரே. | [2] |
எண்ணார் மும்மதில் எய்த இமையா முக்கண் பண் ஆர் நால்மறை பாடும் பரமயோகி, கண் ஆர் நீறு அணி மார்பன்-கள்ளில் மேயான், பெண் ஆண் ஆம் பெருமான், எம் பிஞ்ஞகனே. | [3] |
பிறை பெற்ற சடை அண்ணல், பெடைவண்டு ஆலும் நறை பெற்ற விரிகொன்றைத்தார் நயந்த கறை பெற்ற மிடற்று அண்ணல் கள்ளில் மேயான், நிறை பெற்ற அடியார்கள் நெஞ்சு உள்ளானே. | [4] |
விரையாலும் மலராலும் விழுமை குன்றா உரையாலும் எதிர் கொள்ள, ஊரார், அம் மாக் கரை ஆர் பொன் புனல் வேலிக் கள்ளில் மேயான் அரை ஆர் வெண் கோவணத்த அண்ணல் தானே. | [5] |
நலன் ஆய பலி கொள்கை நம்பான், நல்ல வலன் ஆய மழுவாளும் வேலும் வல்லான், கலன் ஆய தலை ஓட்டான்-கள்ளில் மேயான்; மலன் ஆய தீர்த்து எய்தும், மா தவத்தோர்க்கே. | [6] |
பொடியார் மெய் பூசினும், புறவின் நறவம் குடியா ஊர் திரியினும், கூப்பிடினும், கடி ஆர் பூம்பொழில்-சோலைக் கள்ளில் மேயான் அடியார் பண்பு இகழ்வார்கள், ஆதர்களே. | [7] |
திரு நீலமலர் ஒண்கண் தேவி பாகம் புரிநூலும் திரு நீறும் புல்கு மார்பில், கரு நீலமலர் விம்மு கள்ளில், என்றும் பெரு நீலமிடற்று அண்ணல் பேணுவதே. | [8] |
வரி ஆய மலரானும் வையம் தன்னை உரிது ஆய அளந்தானும் உள்ளுதற்கு அங்கு அரியானும் அரிது ஆய கள்ளில் மேயான், பெரியான் என்று, அறிவார்கள் பேசுவாரே. | [9] |
ஆச்சியப் பேய்களோடு அமணர் குண்டர் பேச்சு இவை நெறி அல்ல; பேணுமின்கள், மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில் தீச் செய்த சடை அண்ணல் திருந்து அடியே! | [10] |
திகை நான்கும் புகழ் காழிச் செல்வம் மல்கு பகல் போலும் பேர் ஒளியான்-பந்தன்-நல்ல முகை மேவு முதிர் சடையான் கள்ளில் ஏத்த, புகழோடும் பேர் இன்பம் புகுதும் அன்றே. | [11] |