சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.100
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீடு அலர் சோதி வெண்பிறையோடு பண் - குறிஞ்சி (திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் ஆவுடைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=3wtL44T-VIM |
7.002
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கோத்திட்டையும் கோவலும் கோவில் கொண்டீர்; பண் - இந்தளம் (திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் ஆவுடைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=9hNg6XWc08I |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.100  
நீடு அலர் சோதி வெண்பிறையோடு
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருப்பரங்குன்றம் ; (திருத்தலம் அருள்தரு ஆவுடைநாயகியம்மை உடனுறை அருள்மிகு பரங்கிரிநாதர் திருவடிகள் போற்றி )
நீடு அலர் சோதி வெண்பிறையோடு நிரை கொன்றை சூடலன், அந்திச் சுடர் எரி ஏந்திச் சுடுகானில் ஆடலன், அம் சொல் அணியிழையாளை ஒருபாகம் பாடலன், மேய நன்நகர்போலும் பரங்குன்றே. | [1] |
அங்கம் ஓர் ஆறும் அருமறை நான்கும் அருள் செய்து, பொங்கு வெண் நூலும் பொடி அணி மார்பில் பொலிவித்து, திங்களும் பாம்பும் திகழ்சடை வைத்து ஓர் தேன்மொழி பங்கினன் மேய நன்நகர்போலும் பரங்குன்றே. | [2] |
நீர் இடம் கொண்ட நிமிர் சடை தன்மேல் நிரை கொன்றை சீர் இடம் கொண்ட எம் இறைபோலும், சேய்து ஆய ஓர் உடம்புள்ளே உமை ஒருபாகம் உடன் ஆகி, பாரிடம் பாட, இனிது உறை கோயில் பரங்குன்றே. | [3] |
வளர் பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக் குளிர்பூஞ்சாரல் வண்டு அறை சோலைப் பரங்குன்றம், தளிர் போல் மேனித் தையல் நல்லாளோடு ஒரு பாகம், நளிர் பூங்கொன்றை சூடினன் மேய நகர்தானே. | [4] |
பொன் இயல் கொன்றை பொறி கிளர் நாகம் புரிசடைத் துன்னிய சோதி ஆகிய ஈசன், தொல்மறை பன்னிய பாடல் ஆடலன், மேய பரங்குன்றை உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை, உறு நோயே. | [5] |
கடை நெடு மாடக் கடி அரண் மூன்றும் கனல் மூழ்கத் தொடை நவில்கின்ற வில்லினன், அந்திச் சுடுகானில் புடை நவில் பூதம் பாட, நின்று ஆடும் பொரு சூலப்- படை நவில்வான்தன் நன்நகர்போலும் பரங்குன்றே. | [6] |
அயில் உடை வேல் ஓர் அனல் புல்கு கையின் அம்பு ஒன்றால் எயில் பட எய்த எம் இறை மேய இடம்போலும் மயில் பெடை புல்கி மா நடம் ஆடும் வளர் சோலை, பயில் பெடைவண்டு பாடல் அறாத பரங்குன்றே. | [7] |
மைத் தகு மேனி வாள் அரக்கன் தன் மகுடங்கள்- பத்தின, திண்தோள் இருபதும், செற்றான் பரங்குன்றைச் சித்தம் அது ஒன்றிச் செய் கழல் உன்னிச் சிவன் என்று நித்தலும் ஏத்த, தொல்வினை நம்மேல் நில்லாவே. | [8] |
முந்தி இவ் வையம் தாவிய மாலும், மொய் ஒளி உந்தியில் வந்து இங்கு அருமறை ஈந்த உரவோனும், சிந்தையினாலும் தெரிவு அரிது ஆகித் திகழ்சோதி, பந்து இயல் அம் கை மங்கை ஒர்பங்கன், பரங்குன்றே! | [9] |
குண்டு ஆய் முற்றும் திரிவார், கூறை மெய் போர்த்து, மிண்டு ஆய் மிண்டர் பேசிய பேச்சு மெய் அல்ல; பண்டு ஆல் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றைத் தொண்டால் ஏத்த, தொல்வினை நம்மேல் நில்லாவே. | [10] |
தட மலி பொய்கைச் சண்பை மன் ஞானசம்பந்தன், படம் மலி நாகம் அரைக்கு அசைத்தான் தன் பரங்குன்றைத் தொடை மலி பாடல் பத்தும் வல்லார், தம் துயர் போகி, விடம் மலி கண்டன் அருள் பெறும் தன்மை மிக்கோரே. | [11] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.002  
கோத்திட்டையும் கோவலும் கோவில் கொண்டீர்;
பண் - இந்தளம் (திருத்தலம் திருப்பரங்குன்றம் ; (திருத்தலம் அருள்தரு ஆவுடைநாயகியம்மை உடனுறை அருள்மிகு பரங்கிரிநாதர் திருவடிகள் போற்றி )
நம்பியாரூரர் பாண்டி நாட்டிலுள்ள திருவாலவாய் முதலிய தலங்களை வழிபட எண்ணிச் சேரர்கோனுடன் புறப்பட்டார். திரு மறைக்காடு, அகத்தியான்பள்ளி, கோடிக்குழகர் முதலிய தலங்களைப் பணிந்து பாண்டிநாடடைந்து திருப்புத்தூரை வழிபட்டு மதுரையை அடைந்தார்கள். அப்பொழுது பாண்டியனும், பாண்டியன் மகளை மணம் புரிந்து வேட்டகத்திலிருந்த சோழனும் சுந்தரரையும் சேரமான் பெரு மாளையும் வரவேற்றுத் திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். சுந்தரர் திருப்பதிகம் பாடிப் போற்றினார். சேரமான் தமக்குத் திருமுகமனுப்பிய ஆலவாயண்ணலை வழிபட்டார். பாண்டியன் இவ்விருவரையும் தம் அரண்மனைக்கு அழைத்து உபசரித்தான். இருவரும் சிலநாள் தங்கி ஆலவாயண்ணலை வழிபட்டினி துறைந்தனர். சுந்தரர் மூவேந்தருடன் திருப்பூவணம், திருவாப்பனூர், திருவேடகம் முதலிய தலங்களையிறைஞ்சித் திருப்பரங்குன்றத்தை யடைந்து திருப்பதிகம் பாடிப் பரவினார்.
கோத்திட்டையும் கோவலும் கோவில் கொண்டீர்; உம்மைக் கொண்டு உழல்கின்றது ஓர், கொல்லைச் சில்லை, சே, திட்டுக் குத்தித் தெருவே திரியும்; சில பூதமும் நீரும் திசை திசையன; சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ, நும் அரைக் கோவணத்தோடு ஒரு தோல் புடைசூழ்ந்து, ஆர்த்திட்டதும் பாம்பு; கைக் கொண்டதும் பாம்பு அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே . | [1] |
முண்டம் தரித்தீர்; முதுகாடு உறைவீர்; முழுநீறு மெய் பூசுதிர்; மூக்கப் பாம்பைக் கண்டத்திலும் தோளிலும் கட்டி வைத்தீர்; கடலைக் கடைந்திட்டது ஓர் நஞ்சை உண்டீர்; பிண்டம் சுமந்து உம்மொடும் கூடமாட்டோம்; பெரியாரொடு நட்பு இனிது என்று இருத்தும்; அண்டம் கடந்து அப் புறத்தும் இருந்தீர் அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே . | [2] |
மூடு ஆய முயலகன், மூக்கப் பாம்பு, முடை நாறிய வெண்தலை, மொய்த்த பல் பேய், பாடாவரு பூதங்கள், பாய் புலித்தோல், பரிசு ஒன்று அறியாதன பாரிடங்கள், தோடு ஆர் மலர்க் கொன்றையும், துன் எருக்கும்; துணை மா மணி நாகம் அரைக்கு அசைத்து, ஒன்று ஆடாதனவே செய்தீர்; எம்பெருமான்! அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே . | [3] |
மஞ்சுண்ட மாலை மதி சூடு சென்னி, மலையான் மடந்தை மணவாள நம்பி! பஞ்சுண்ட அல்குல் பணை மென் முலையாளொடு நீரும் ஒன்று ஆய் இருத்தல் ஒழியீர்; நஞ்சு உண்டு தேவர்க்கு அமுதம் கொடுத்த நலம் ஒன்று அறியோம்; உம் கை நாகம் அதற்கு அஞ்சு உண்டு, படம்; அது போக விடீர் அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே . | [4] |
பொல்லாப் புறங்காட்டு அகத்து ஆட்டு ஒழியீர்; புலால் வாயன பேயொடு பூச்சு ஒழியீர்; எல்லாம் அறிவீர்; இதுவே அறியீர் என்று இரங்குவேன், எல்லியும் நண்பகலும்; கல்லால் நிழல் கீழ் ஒரு நாள் கண்டதும், கடம்பூர்க் கரக்கோயிலில் முன் கண்டதும், அல்லால் விரகு ஒன்று இலம்; எம்பெருமான்! அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே . | [5] |
தென்னாத்தெனாத்தெத்தெனா என்று பாடிச் சில்பூதமும் நீரும் திசை திசையன; பல்-நால்மறை பாடுதிர்; பாசூர் உளீர்; படம் பக்கம் கொட்டும் திரு ஒற்றியூரீர்; பண் ஆர் மொழியாளை ஓர் பங்கு உடையீர்; படு காட்டு அகத்து என்றும் ஓர் பற்று ஒழியீர்; அண்ணாமலையேன் என்றீர்; ஆரூர் உளீர் அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே . | [6] |
சிங்கத்து உரி மூடுதிர்; தேவர் கணம் தொழ நிற்றீர்; பெற்றம் உகந்து ஏறிடுதிர்; பங்கம் பல பேசிடப் பாடும் தொண்டர் தமைப் பற்றிக் கொண்டு ஆண்டு விடவும் கில்லீர்; கங்கைச் சடையீர்! உம் கருத்து அறியோம்; கண்ணும் மூன்று உடையீர்; கண்ணே ஆய் இருந்தால், அங்கத்து உறு நோய் களைந்து ஆளகில்லீர் அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே . | [7] |
பிணி வண்ணத்த வல்வினை தீர்த்து அருளீர்; பெருங்காட்டு அகத்தில் பெரும் பேயும் நீரும் துணி வண்ணத்தின் மேலும் ஓர் தோல் உடுத்து, சுற்றும் நாகத்தராய், சுண்ண நீறு பூசி, மணி வண்ணத்தின் மேலும் ஓர் வண்ணத்தராய், மற்றும் மற்றும் பல்பல வண்ணத்தராய், அணி வண்ணத்தராய், நிற்றீர்; எம்பெருமான்! அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே . | [8] |
கோள் ஆளிய குஞ்சரம் கோள் இழைத்தீர்; மலையின் தலை அல்லது கோயில் கொள்ளீர்; வேள் ஆளிய காமனை வெந்து அழிய விழித்தீர்; அது அன்றியும், வேய் புரையும் தோளான் உமை நங்கை ஓர்பங்கு உடையீர்; உடு கூறையும் சோறும் தந்து ஆளகில்லீர்; ஆள் ஆளியவே கிற்றீர்; எம்பெருமான்! அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே . | [9] |
பாரோடு விண்ணும் பகலும் ஆகி, பனி மால்வரை ஆகி, பரவை ஆகி, நீரோடு தீயும் நெடுங் காற்றும் ஆகி, நெடு வெள்ளிடை ஆகி, நிலனும் ஆகி, தேர் ஓட வரை எடுத்த அரக்கன் சிரம் பத்து இறுத்தீர்; உம் செய்கை எல்லாம் ஆரோடும் கூடா; அடிகேள்! இது என்? அடியோம் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே. | [10] |
அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதும் என்று அமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி, முடியால் உலகு ஆண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த ஆறும் ஓர் நான்கும், ஓர் ஒன்றினையும் படியா, இவை கற்று வல்ல அடியார், பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே குடி ஆகி, வானோர்க்கும் ஓர் கோவும் ஆகி, குல வேந்தராய் விண் முழுது ஆள்பவரே . | [11] |